ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு


ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், வழக்கு தொடர்பாக முகாந்திரம், தகுதிப்பாடு ஆகியவற்றைப் பரிசீலிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டது. 
இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பது தொடர்பான முகாந்திரம், தகுதிப்பாடு ஆகியவை குறித்து பசுமைத் தீர்ப்பாயம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும். மேலும்,முகாந்திரம், தகுதிப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு வாதிடலாம். ஆனால், இந்த மனு மீதான விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது' எனத் தெரிவித்தனர்.
முன்னதாக இந்த விசாரணையின்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி, தமிழக அரசு எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டது. உத்தரவு நகலை அளிக்காமலேயே ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்த பிறகு, உத்தரவின் நகல் கதவில் ஒட்டப்பட்டது. சீல் வைப்புக்கு முறையான காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெறும் எங்களது மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற அனுமதிக்க வேண்டும்' என்றார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே, மக்கள் நலன் கருதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய முகாந்திரம் இல்லை. எனவே, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெறும் மேல்முறையீட்டு மனு தொடர்பாக உள்ள முகாந்திரம், தகுதிப்பாடு குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்' என்றார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால், தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கடந்த மே 28-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மட்டும் மேற்கொள்ள கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட்9) அனுமதி அளித்தது. மேலும், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com