கேரள மாநிலம், அலுவா பகுதியில் வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து நிறைமாத கர்ப்பிணியை ஹெலிகாப்டர் மூலம் கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர், கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
கேரளத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில், ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவை முழு வீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அலுவா பகுதியில் வெள்ளம் சூழ்ந்த ஒரு வீட்டில் பிரசவ வலியுடன் இருந்த நிறைமாத கர்ப்பிணியை மீட்கும் துணிச்சலான நடவடிக்கையை கடற்படையினர் வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர். அதன்படி, முதலில் ஒரு மருத்துவர் மூலம் அந்த பெண்ணின் நிலைமை பரிசோதிக்கப்பட்டது. அதன்பிறகு, ஹெலிகாப்டர் மூலம் அந்த பெண் மீட்கப்பட்டு, கொச்சியிலுள்ள கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அந்த கர்ப்பிணி மீட்கப்பட்ட துணிச்சலான நடவடிக்கையின் விடியோ பதிவையும் அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட கடற்படையினருக்கு, அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதேபோல், எர்ணாகுளம் மாவட்டம் பரவூர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து 101 வயது மூதாட்டியை விமானப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.