வெள்ள மீட்பு சேவைக்கு பணம் வேண்டாம் என்று கேரள மீனவர்கள் தெரிவித்துள்ளது அம்மாநில மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்து வந்த வரலாறு காணாத கன மழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையான பாதிப்புக்குள்ளானது. ஞாயிற்றுக்கிழமை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்ததால் அங்கு மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.
கேரளாவில் மிகவும் பாதிக்கப்பட்ட ஆலப்புழா, எர்ணாகுளம், பத்தனம்திட்டா மற்றும் திரிச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீனவர்கள் தங்களது படகுகளுடன் சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர். இந்த மீட்புப் பணியில் ஈடுபடும் மீனவர்களுக்கு தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஃபோர்ட் கொச்சியில் இருந்து மீனவர்களுக்கான தலைவர் காய்ஸ் முகமது விடியோ மூலம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் தெரிவித்திருப்பதாவது,
"நானும், எனது நண்பர்களும் ஏராளமான மக்களை மீட்டது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நாங்களும் (மீனவர்கள்) உங்களுடைய படை என்று நீங்கள் (கேரள முதல்வர்) கூறியது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. ஆனால், எங்களுடைய சேவைக்கு ரூ.3,000 வழங்கப்படும் என்று நீங்கள் அறிவித்தது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.
இருப்பினும், சேதமடைந்த எங்களுடைய படகுகளை இலவசமாக சரிசெய்து தருகிறோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. அது மிகவும் நல்ல செய்தி. ஆனால், எங்களுடைய சேவைக்கு பணம் தேவையில்லை" என்றார்.
மீனவர்களின் இந்த செயல் கேரள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.