புது தில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13500 கோடி மோசடி செய்து விட்டு இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பதை இன்டர்போல் உறுதி செய்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றில் ரூ 13500 கோடி மோசடி செய்து விட்டு, ரகசியமாக இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்று விட்டார். அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பதுங்கியிருப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அங்கிருந்து இங்கிலாந்துக்கு வந்து, லண்டனில் அவரது கடை ஒன்றில் தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரில் சர்வதேச காவல்துறையான 'இன்டர்போல்' சார்பில் நீரவ் மோடிக்கு எதிராக இருமுறை 'ரெட் கார்னர்' நோட்டீஸ் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பதை இன்டர்போல் உறுதி செய்துள்ளது. இங்கிலாந்து அதிகாரிகள் அனுப்பியுள்ள மின்னஞ்சல் மூலம் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நீரவ் மோடியினை நாடு கடத்த இங்கிலாந்திடம் கோரிக்கை வைக்குமாறு மத்திய வெளியுறவுத் துறைக்கு சிபிஐ வேண்டுகோள் வைத்துள்ளது.
இந்த கோரிக்கையானது மத்திய வெளியுறவுத் துறையின் வாயிலாக இங்கிலாந்து அதிகாரிகளுக்கு மேல்நடவடிக்கை கோரி அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.