சகிப்பின்மை, மதவாத தூண்டுதல்களுக்கு முடிவுகட்ட மன்மோகன் சிங் அழைப்பு
சகிப்பின்மை, மதவாத தூண்டுதல்கள், வெறுப்புணர்வோடு நடைபெறும் கும்பல் தாக்குதல்கள், வன்முறைச் சம்பவங்கள் ஆகியவற்றை ஒன்றிணைந்து முடிவுகட்டுவதற்கான வழிமுறைகளை மக்கள் கண்டறிய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி, அவரது பெயரில் சத்பாவனா விருது வழங்கும் விழா, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின்
பேரனுமாகிய கோபால கிருஷ்ண காந்திக்கு, ராஜீவ் காந்தி சத்பாவனா விருது வழங்கப்பட்டது.
சமூக ஒற்றுமை, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு கோபால கிருஷ்ண காந்தி பங்காற்றியதைப் பாராட்டும் வகையில், இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. விழாவில் மன்மோகன் சிங் பேசியதாவது:
அமைதி, தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு ராஜீவ் காந்தி பங்காற்றியதைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
மதச் சார்பின்மை, சகிப்புத்தன்மை, சமூக நல்லிணக்கம் போன்றவற்றை உருவாக்கிட தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் ராஜீவ் காந்தி.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, சகிப்பின்மை வளர்ச்சி, மதவாத தூண்டுதல்கள், சில கும்பல்கள் தங்களது சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது போன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இதுபோன்ற சம்பவங்கள் நாட்டின் நலனுக்கு ஊறு விளைப்பவை. இந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும். அதற்காக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பங்காற்ற வேண்டும் என்றார் அவர்.