மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எந்த நெருக்கடிச் சூழலுக்கும் அடிபணிந்தது கிடையாது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அவருடைய ஆட்சியின்போது தேசத்தின் அணு ஆயுத வலிமை உலக அரங்கில் பறைசாற்றப்பட்டதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் மறைவுக்காக இரங்கல் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி, அதன் பின்னர் கூட்டத்தில் பேசியதாவது: கடந்த 1993-ஆம் ஆண்டு முதன்முறையாக பிரதமர் பதவியை வாஜ்பாய் ஏற்றார். அப்போது அவரது அரசுக்கு எந்தக் கட்சியும் ஆதரவளிக்க முன்வரவில்லை. இதனால் வெறும் 13 நாள்களில் பெரும்பான்மை இல்லாமல் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இருப்பினும், வாஜ்பாய் தனது மன உறுதியையும், நம்பிக்கையையும் இழக்கவில்லை. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தொடர்ந்து அரசியல் பயணம் மேற்கொண்டார்.
அப்போதுகூட அவரால் 13 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருக்க முடிந்தது. அதற்கு பின்னர், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் 5 ஆண்டுகள் முழுமைக்கும் நிலையான ஆட்சியை அவர் அளித்தார். அந்தத் தருணத்தில்தான் அணு ஆயுத சோதனைகளை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியது. இந்தியா வலிமைமிக்க தேசமாக உலக அரங்கில் உருவெடுத்தது அப்போதுதான். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தரகண்ட் ஆகிய மூன்று மாநிலங்கள் புதிதாக உதயமாகின. அவற்றை பிரிக்கும்போது எந்தப் பிரச்னையும் எழவில்லை. இதிலிருந்தே வாஜ்பாயின் நிர்வாகத் திறனை அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமன்றி, சர்வதேச அளவில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை வலிமையாக எடுத்துரைத்தவரும் அவர்தான்.
அரசியல் தோல்விகளைக் கண்டு ஒருபோதும் வாஜ்பாய் பயந்ததும் இல்லை; நெருக்கடிகளுக்கு அவர் பணிந்ததும் இல்லை என்றார் பிரதமர் மோடி.