திருவனநாதபுரம்: கேரளா வெள்ள பாதிப்பு மீட்பு பணிக்கு வந்த ஹெலிகாப்டர்களை முறைகேடாக பயன்படுத்தியதாக கேரள அமைச்சர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வரலாறு காணாத கனமழையால் கேரளாவின் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கவும், நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கவும் ஒன்பது ஹெலிகாப்டர்கள் அங்கு பயன்படுத்தப்படுகின்றன. சாதாரணமாக ஹெலிகாப்டரில் ஒரு மணி நேரம் பறந்தால், 70,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பது கவனிக்கத்தக்கது.
ஆபத்து காலங்களில் பேரிடர் மீட்பு பணிக்காக வழங்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர்களை, நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எத்தகைய பணிகளுக்கும் பயன்படுத்தக்கூடாது என்பது நடைமுறையாகும். ஆனால் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன் ஆகிய இருவரும் நிவாரண முகாமுக்கு செல்ல இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி உள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.
பாதிப்புக்குள்ளான கோட்டயம் மாவட்டத்தில் சங்கனசேரி என்ற இடத்தில் நிவாரண முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா பகுதியில் இருந்து இந்த நிவாரண முகாமுக்கு சாலை மார்க்கமாக செல்ல இயலும்.
இருப்பினும் இரு அமைச்சர்களும் ஹெலிகாப்டர்களில் சென்று கோட்டயம் போலீஸ் மைதானம் சென்று அங்கிருந்து கார் மூலம் நிவாரண முகாம் உள்ள இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் திரும்பும் பொழுது சங்கனசேரியில் இருந்து ஆலப்புழாவுக்கு காரில் திரும்பி உள்ளனர். ஹெலிகாப்டரை பயன்படுத்தவில்லை.
நடைமுறை விதிகளை மீறி இருவரும் அதிகார துஷ்பிரயோகம் செய்து மீட்பு பணிக்கான ஹெலிகாப்டரை நிவாரண முகாமை பார்வையிடப் பயன்படுத்தியுள்ளதாக தற்பொழுது சர்ச்சை நிலவி வருகிறது.