புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெறுவதில்லை என்ற கொள்கையை மத்திய அரசு மரபாகப் பின்பற்றி வருவதாக மத்திய அமைச்சர் அல்போன்ஸ் விளக்கமளித்துள்ளார்.
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பில் இதுவரை 680 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் கேரள அரசு கோரிக்கை விடுக்காமலே, கேரள மாநிலத்தின் நிலையைப் பார்த்து, ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவியை மாநிலத்தின் புனரமைப்பு பணிகளுக்கு தருவதாக அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து உதவி பெறுவதில்லை என்று கூறி மறுத்துவிட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்குக் கேரள அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. கேரள அரசியல்வாதிகளும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெறுவதில்லை என்ற கொள்கையை மத்திய அரசு மரபாகப் பின்பற்றி வருவதாக மத்திய அமைச்சர் அல்போன்ஸ் விளக்கமளித்துள்ளார்.
கேரள அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான அல்போன்ஸ் கண்ணன்தானம் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இத்தகைய சூழ்நிலையில் வெளிநாடுகளில் எந்தவிதமான நிதியுதவிகளையும் பெறுவதில்லை என்ற முடிவு, கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் எடுக்கப்பட்டது. அப்போது இருந்து, இந்தக் கொள்கையை ஒரு மரபாக அரசு பின்பற்றி வருகிறது.
உதாரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டது. அப்பொழுது ஏராளமான பொருட்சேதங்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டன. அப்போது, பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு முன்வந்து நிதியுதவி அறிவித்தன. ஆனால், அந்த நிதியுதவியைப் பெறுவதற்கு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் மறுத்துவிட்டார். இதை அப்போதிருந்தே அரசு கொள்கையாகப் பின்பற்றி வருகிறது.
இவ்வாறு அல்போன்ஸ் விளக்கமளித்துளார்.