திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு அமீரகம் ரூ 700 கோடி தருவதாகக் கூறவே இல்லை; இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டும் என்று கேரள பாஜக தலைமை தெரிவித்துள்ளது.
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பில் இதுவரை 680 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் கேரள அரசு கோரிக்கை விடுக்காமலே, கேரள மாநிலத்தின் நிலையைப் பார்த்து, ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவியை வழங்க தயாராக இருப்பதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார். அப்பொழுது இந்தத் தகவலை தமக்கு கேரளவைச் சேர்ந்தவரும், மத்திய கிழக்கின் முக்கியமான தொழில் அதிபரான யூசுப் அலி தெரிவித்தார் என்றும் கூறினார்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் ரூ 700 கோடி தருவதாகக் கூறவே இல்லை; இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டும் என்று கேரள பாஜக தலைமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை வெள்ளியன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
கேரளாவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ 700 கோடி தருவதாக ஐக்கிய அரபு அமீரகம் கூறவே இல்லை. நிலைமை இப்படியிருக்க இதுதொடர்பாக மாநில முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டும். எங்கிருந்து இந்தத் தகவலை அவர் பெற்றார் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவது தொடர்பாக தயக்கங்களை வெளியிட்டவுடன் மத்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் அவதூறு பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. மோடியின் அரசு தவிர வேறு எந்த மத்திய அரசும் மாநிலத்திற்கு இந்த அளவுக்கு நிதி ஒதுக்கியதில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.