லக்னௌ: தனது கர்ப்பிணி மனைவியின் சிகிச்சைக்கு பணம் தேவை என்பதற்காக தன்னுடைய 4 வயது பெண் குழந்தையை தந்தை ஒருவர் விற்க முயன்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தின் திர்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரவிந்த் பன்ஜாரா - சுக்தேவி தம்பதி. இவர்களுக்கு 4 வயதில் ரோஷினி மற்றும் ஒரு வயதில் ஜானு என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக சுக்தேவி கர்ப்பமானார். ஏழாவது மாதத்தில் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை பலகீனமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் உடனடியாக சிகிச்சைக்காக அவருக்கு ரத்தம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
ஏழ்மை நிலையில் இருக்கும் பன்ஜாராவிடம் சிகிச்சைக்கு ரத்தம் ஏற்பாடு செய்யும் அளவு பணவசதி இல்லை. எனவே வேறு வழியின்றி தனது மூத்த மகள் ரோஷினியை 25,000 ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்த தகவலை அறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சென்று அந்த செயலைத் தடுத்து நிறுத்தினார்கள்.
அத்துடன் சுக்தேவியின் சிகிச்சைக்கு ஆகும் முழு செலவையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாக திர்வா மாவட்ட காவல்துறை உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.