மும்பை: உலகின் உயரமான சிலையை அமைக்க முடியுமென்றால், ராமர் கோவில் கட்ட முடியாதா? என்று ஆர்எஸ் எஸ் தலைவர் தத்தாத்ரேயா ஹோசபேல் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மும்பையில் வி.ஹெச்.பி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றி கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் செயலாளர்களில் ஒருவரான தத்தாத்ரேயா ஹோசபேல் பேசியதாவது:
ஹிந்து மக்களின் பொறுமையை கண்டிப்பாக சோதிக்கக் கூடாது. நாங்கள் அவர்களுடன் சண்டையிடவில்லை ஆனால் தொடர்ந்து களத்தில் இருக்கிறோம். ராமர் கோவில் கட்டப்படுவதற்கு இதற்கு மேலும் காத்திருக்க முடியாது. கண்டிப்பாக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும். நர்மதை நதியின் கரையில் இரும்பு மனிதரான வல்லபாய் படேலுக்கு உலகின் உயரமான சிலையை அமைக்க முடியுமென்றால், சரயு நதிக்கரையில் ராமருக்கு கோவில் கட்டுவதற்கு சட்டம் இயற்ற முடியாதா?
நீங்கள் அவசரச் சட்டம் இயற்றுவீர்களோ? நிரந்தரச் சட்டம் கொண்டு வருவீர்களோ? நீதிமன்ற நடைமுறையினை பின்பற்றுவீர்களோ அல்லது பேச்சுவார்தை நடத்துவீர்களோ, கோவில் கட்டுவதற்கு ஏதுவான சட்டம் நிறைவேற்றும் வழி வகை கண்டறியப்பட வேண்டும்.அயோத்தியில் ராமர் ஒரு கூடாரத்தில் வசிக்கத் துவங்கி 26 ஆண்டுகள் ஆகி விட்டது.
அயோத்தியில் இருந்த மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த நரசிம்ம ராவ் தலைமையிலான அரசானது அங்கு ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தால், அந்த இடமானது கோவில் கட்ட ஏதுவாக இந்துக்களிடம் ஒப்படைக்கப் படும் என்று உறுதி அளித்திருந்தது. ஆனால் அது தற்போது ராமர் கோவில் முக்கிய பிரச்னை இல்லை என்று கூறுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.