பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (ஐஐஎஸ்சி) புதன்கிழமை ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்ததில் ஆய்வு மாணவர் உயிரிழந்தார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் இந்திய அறிவியல் கழகம் இயங்கி வருகிறது. இங்குள்ள ஆய்வுக்கூடத்தில் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மைசூரைச் சேர்ந்த மனோஜ்குமார் (32) என்ற ஆய்வு மாணவர் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நேரிட்ட விபத்தில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உடன் பணிபுரிந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கார்த்திக், நிதிஷ்குமார், அதுல்யா ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் மூவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த ஆய்வுக்கூடத்தில் உள்ள ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்ததால், இந்த விபத்து நேரிட்டதாகத் தெரிகிறது. தகவல் அறிந்த மாநகர காவல் ஆணையர் சுனில்குமார், மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் பி.கே.சிங் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பழமை வாழ்ந்த, நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் இந்திய அறிவியல் கழகத்தில் விபத்து ஏற்பட்டு, ஆய்வு மாணவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் பேசும் நிலைக்கு வந்த பிறகுதான், ஆய்வுக்கூடத்தில் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.