நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. இவர் தன்னிடம் படித்த மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் முருகன், பல்கலைக் கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில் மூவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட கோரி வழக்கறிஞர்கள் ஜெய், சுகின் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை சிபிஐக்கு மாற்ற மறுத்ததோடு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.