எதிர்வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணையும் மகா கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. இதுதொடர்பாக டிசம்பர் 10-ஆம் தேதி புதுதில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைக்கும் தீவிர முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி கலந்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அவரை இதில் இணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு பேசி வருவதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இந்த மகா கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என தெரிவித்தனர். இதில் 7 மாநில முதல்வர்கள் மற்றும் 10 தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளப்போவதாகக் கூறப்படுகிறது.