5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்துவிட்டதாகவும், 2019 இறுதிப்போட்டிக்கான அறிகுறி தான் இது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தொடர்ச்சியான பதிவுகள்,
"மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது மக்களின் தீர்ப்பு. நாட்டு மக்கள் மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி இது. அநீதி, அக்கிரமம், அமைப்புகள் மீதான தாக்குதல், அமைப்புகளை தவறாக பயன்படுத்துதல் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், தலித்துகள், பட்டியலின மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு வேலையின்மை உள்ளிட்டவற்றுக்கு எதிராக கிடைத்த வெற்றி இது.
அரையிறுதியில் அனைத்து மாநிலங்களிலும் பாஜக இல்லை என்பது நிரூபனம் ஆகியுள்ளது. 2019 இறுதிப்போட்டிக்கான ஜனநாயக அறிகுறி தான் இது. மக்கள் தான் எப்போதுமே ஜனநாயகத்தின் ஆட்ட நாயகர்கள். வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில், மத்தியப் பிரதேசம் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே 10 தொகுதிகளுக்கும் கீழ் தான் வித்தியாசம் உள்ளது. அதனால், அங்கு தொங்கு சட்டப்பேரவை அமையவே அதிக வாய்ப்புள்ளது. அப்படி அமையும் பட்சத்திலும், பகுஜன் சமாஜ் தனது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இதற மற்றும் சுயேட்சைகளின் ஆதரவு அங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.