அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன், வெளிநாட்டுக்கு தப்பி ஓடமாட்டேன் என தொழிலதிபர் ராபர்ட் வதோரா தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தங்களில் தரகுத் தொகை பெற்றதாக எழுந்த சந்தேகத்திலும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள சட்டவிரோத சொத்து விவரங்களை அறியும் முயற்சியாகவும் இந்த சோதனை நடைபெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய நபர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
அதேசமயம், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் முறைகேட்டு வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மெஷெலை, துபையில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் சமயத்தில், வதேராவுடன் தொடர்புடைய நபர்களின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கிறது.
இந்நிலையில், ராபர்ட் வதோரா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என பெயரைப் பயன்படுத்தி திட்டமிட்டு காங்கிரஸ் கட்சிக்கு மிரட்டல் விடுக்கப்படுவதை அனுமதிக்கமாட்டேன். அமலாக்கத்துறையுடன் இவ்வழக்கு தொடர்பாக போதிய ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். ஆனால் இந்த விசாரணை தொடர்பான நடவடிக்கைகள் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
ஆனால், இதன் காரணமாக எனது குடும்பத்துக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. நான் வெளிநாட்டுக்கு தப்பி ஓட மாட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.