மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலிருந்து, மக்களவைத் தேர்தல் வேறுபட்டது. இதனால், மாநிலத் தேர்தல் முடிவுகளை, மக்களவைத் தேர்தலுக்கான அளவுகோலாக கருதி, ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், இதுதொடர்பாக பேசியதாவது:
மாநில அளவிலான தேர்தல்கள் முற்றிலும் வேறுபட்டவை. இத்தேர்தல்களில் முன்னிறுத்தப்படும் விவகாரங்கள் வேறுபட்டவை. இதனால், மாநில தேர்தல்கள் முடிவுகளை வைத்து, தேசிய அளவில் ஒரு முடிவுக்கு வரக் கூடாது. உதாரணமாக, கடந்த 1984-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 27-இல் வெற்றி பெற்றது. ஆனால், சில மாதங்களுக்கு பின் நடைபெற்ற அம்மாநில பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் 140-இல் ஜனதா கட்சி வெற்றி பெற்றது. இது மாறுபட்ட முடிவாக அமைந்தது என்றார்.