புது தில்லி: பிரபல ஆங்கில நாவலாசிரியர் அமிதவ் கோஷுக்கு 2018- ம் ஆண்டுக்கான ஞான பீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இலக்கியத்திற்கு என வழங்கப்படும் உயரிய விருது ஞான பீட விருது ஆகும். அந்த வகையில் 2018-ஆம் ஆண்டுக்கான ஞான பீட விருது பிரபல ஆங்கில நாவலாசிரியர் அமிதவ் கோஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 54-ஆவதுஆண்டாக இந்த விருது வழங்கபப்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் புகழ் பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளர்களுள் ஒருவர் அமிதவ் கோஷ். இவருடைய எழுத்துப் பணிக்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாதமி விருதையும் பல்வேறு சர்வதேச விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.
மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் பிறந்த இவர், தில்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றவர். ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்து முடித்த பிறகு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சமூக மானுடவியலில் (Social Anthropology) முனைவர் பட்டம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து பிரபல ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். இவர் பின்னர் அமெரிக்காவின் ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியாகப் பணி புரிந்தார். தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்.
சீ ஆஃப் பாப்பிஸ் (Sea of Poppies) நாவல், பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் காரணம் என்ன, பாபர் உண்மையிலே அந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டினரா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கும் வகையில் இவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பு, தி மேன் பிஹைண்ட் தி மாஸ்க் (The Man behind the Mosque) ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.