ரஃபேல் போர் விமானம் வாங்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்: உச்ச நீதிமன்றம்

ரஃபேல் போர் விமானம் வாங்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரஃபேல் போர் விமானம் வாங்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்: உச்ச நீதிமன்றம்


புது தில்லி: ரஃபேல் போர் விமானம் வாங்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையடுத்து, ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரிக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ஒப்பந்தத்தில் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் நீதிமன்றம் அதனை விசாரித்தது. ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான கொள்கை முடிவு, தொகை, ஒப்பந்ததாரர் ஆகியவை குறித்து ஆராயப்பட்டது. விசாரணையில், மத்திய அரசின் ஒப்பந்தம் சரியானதுதான் என்று தெரிய வந்துள்ளது.

வணிக ரீதியாக எந்த சலுகையும் அளிக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை, ரஃபேல் ஒப்பந்தம் சரியானதுதான், திருப்தி அளிக்கிறது என்று தெரிய வந்திருப்பதால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறி விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

முன்னதாக, இந்திய விமானப் படைக்காக, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூ.58,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும்; விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சௌரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது, ரஃபேல் விமானம் தொடர்பான விவரங்களை, மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து சமர்ப்பிக்கும்படி, மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, அந்த விமானத்தின் விலை விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை, முத்திரையிட்ட உறையில் வைத்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்திருந்தது.

இதுதொடர்பாக இருதரப்பு வாதத்தை உச்சநீதிமன்றம் பதிவு செய்துகொண்டது.

"விமானத்தின் விலை உள்பட முழு விவரங்களையும் பகிரங்கமாக வெளியிடுவது, நமது எதிரி நாடுகளுக்கு சாதகமாக அமையக் கூடும். மேலும், இது இந்தியா-பிரான்ஸ் இடையிலான ஒப்பந்த விதிமுறைகளையும், அதிலுள்ள ரகசிய காப்பு அம்சத்தையும் மீறுவது போலாகும். எனவே, விலை தொடர்பான விவகாரத்தில், நீதிமன்றத்துக்கு மேற்கொண்டு என்னால் உதவ இயலாது' என்று  மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதத்தை முன்வைத்திருந்தார்.

நீதிமன்ற கண்காணிப்பு விசாரணை கோரி மனு தாக்கல் செய்திருந்தவர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், "ரஃபேல் ஒப்பந்தம் குறித்த உண்மைகளை பொதுவெளியில் வெளியிடாமல், அந்த விமானத்தின் விலை தொடர்பான விவாதத்தை முன்னெடுக்க முடியாது. எனவே, விலை விவரத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டுமா? என்பது குறித்த முடிவை நாங்கள் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது' என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று தீர்ப்பை வெளியிட்ட நீதிபதிகள், ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com