ரஃபேல் வழக்கு: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் ஓயாத சர்ச்சை
ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், அதனுள் இருக்கும் சர்ச்சை நீடித்து வருகிறது.
ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பாக விசாரணைக் கோரி தாக்கல் செய்த பல்வேறு மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த மனுதாரர்கள் முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், "இந்த தீர்ப்பு எங்கள் மனுவில் இணைத்துள்ள எந்த ஒரு உண்மை ஆவணத்தையும் குறிப்பிடவில்லை. மேலும், விசாரணை வேண்டும் என்ற பிரதான கோரிக்கையும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில உண்மை தகவல்கள் அதிகாரப்பூர்வ ஆவணமாக இல்லை. அந்த தகவல்கள் தவறும் கூட" என்று குறிப்பிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், "ஒப்பந்த விலை விவரங்கள் தலைமை கணக்குத் தணிக்கையாளரிடம் (சிஏஜி) பகிரப்பட்டுள்ளது. சிஏஜி அறிக்கை பொதுக் கணக்கு குழுவால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது. ஆனால், நாடாளுமன்றம் மற்றும் பொது தளத்தில் சிஏஜி அறிக்கையின் எந்தவொரு பகுதியும் சமர்பிக்கவில்லை என்று மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
தவறாக அளிக்கப்பட்டுள்ள தகவலை நீதிமன்றம் நம்பியுள்ளது. சீலிடப்பட்ட கவரில் வழங்கப்படும் தகவல்களை நம்பி, அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவது எவ்வளவு அபாயகரமானது என்பதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர். சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்ட தகவல்களை கண்காணிப்போ உண்மை சரிபார்த்தலோ செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மைகளை மட்டும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, அரசமைப்புச் சட்டம் 32-ன் படி சட்ட அதிகாரத்தின் பார்வையில் இந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்றனர். அதனால், நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் இந்த ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு குற்றமற்றது என்று அர்த்தம் ஆகிவிடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், இதனை தான் குறிப்பிட்டார். சிஏஜி அறிக்கை, பொதுக் கணக்கு குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கணக்கு குழுவின் தலைவர் இங்கு தான் இருக்கிறார். அவர் அதனை பார்வையிடவே இல்லை. அப்படி இருக்கையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அது சமர்பிக்கப்பட்டுள்ளதா என்ற ரீதியில் அவர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ரஃபேல் போர் விமான ஒப்பந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.