மைசூரு: கர்நாடக மாநிலம் சுலவாடி பகுதியில் உள்ள கிச்சகுட்டி மரம்மா ஆலயத்தில் நேற்று அளிக்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்ட 11 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கோயில் தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் உள்ளது. பக்தர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் கோயிலுக்கு முதலில் சென்றுவிட்டு, பிறகு இந்த கோயிலுக்கு வருவார்கள்.
அப்போது, பக்தர்கள் கோயிலில் அளிக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 31பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பிரசாதம் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்க கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கோயிலைக் கட்டுவதிலும், நிர்வாகிப்பதிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், இதன் காரணமாகவே, பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.