இந்திரா உணவகத்தில் ரூ. 150 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக பெங்களுரு நகர செய்தி தொடர்பாளர் என்.ஆர்.ரமேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 189 இந்திரா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 103 உணவங்களை ஒரு தனியார் நிறுவனமும், 86 உணவகங்களை வேறொரு தனியார் நிறுவனமும் நிர்வகிக்கின்றன.
ஒவ்வொரு இந்திரா உணவகத்திலும் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேர் முதல் 3,500 பேர் உணவருந்துவதாக அரசுக்கு தவறான தகவல்களை அந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
அனைத்து இந்திரா உணவங்களிலும் 100-க்கும் குறைவானவர்களே உணவருந்தி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆனால் ஊழல் செய்யும் நோக்கில் அந்த நிறுவனங்கள் அரசுக்கு தவறான எண்ணிக்கையை அளித்து வருகிறது.
இதன் மூலம் மாதத்துக்கு 62 லட்சத்து 70 ஆயிரம் பேர் இந்திரா உணவகங்களில் உணவு சாப்பிடுவதாகவும், இதற்காக அந்த 2 தனியார் நிறுவனங்களும் ரூ. 6.82 கோடி மதிப்பிலான மானியத் தொகையை பெற்று வருகின்றன. இதன் மூலம் ரூ. 150 கோடி மதிப்பில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக அரசு உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.