கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் அருகே கோயில் விழாவில் உணவு சாப்பிட்ட 11 பேர் உயிரிழந்தனர்.
சாம்ராஜ்நகர் அருகேயுள்ள சுலவாடி கிச்சிகுத்தி மாரியம்மன் கோயில் கோபுர அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் மதிய உணவை சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் சுலவாடி கிராமத்தைச் சேர்ந்த கோபியம்மா (35), சாந்தா (20), எம்.ஜி.தொட்டியைச் சேர்ந்த பாப்பண்ணா (50), அனிதா (14) உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மயக்கமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஹனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று சிறிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சி.எஸ்.புட்டராஜூ தெரிவித்துள்ளார்.
மேலும், சிகிச்சை பெற்றுவரும் அனைவரின் மருத்துவச் செலவினங்களையும் அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ள முதல்வர் குமாரசாமி, ஆபத்தான நிலையில் உள்ளவர்களை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். "விழாவில் இரு கோஷ்டியினருக்கு இடையே நடந்த மோதலில் மதிய உணவில் விஷம் கலந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்றார் முதல்வர் குமாரசாமி.