இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதியை மத்திய அரசின் செலவுகளுக்கோ, அரசின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கவோ பயன்படுத்தக் கூடாது; வங்கிகளின் நிதிச் செயல்பாடு தொடர்பான நடவடிக்கைகளுக்கே ஆர்பிஐ நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பெங்களூரில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது: இப்போதைய பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்தவரையில் முழுவதும் உள்நாட்டைச் சார்ந்திருப்பது அல்லது முழுவதும் வெளிநாட்டைச் சார்ந்திருப்பது என்று ஏதாவது ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்ல. ஏனெனில், இப்போது அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பன்முகதன்மை கொண்டவையாக உள்ளன.
கலப்புப் பொருளாதாரம் உருவாகி பல ஆண்டுகாலம் கடந்துவிட்டது. சேமிப்பு என்பதை இப்போதைய தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்தக் கூடாது. எதிர்காலத்துக்குத் தேவையான முதலீட்டையும் சேமிப்பின் மூலம்தான் எதிர்கொள்ள முடியும். அதேபோல, அரசின் நிதிப்பற்றாக்குறையை போக்கவும், அரசின் திட்டச் செலவுகளை எதிர்கொள்ளவும் ஆர்பிஐ உபரிநிதியைப் பயன்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
வங்கிகளின் நிதி சார்ந்த செயல்பாடுகளுக்காக மட்டுமே ஆர்பிஐ நிதி பயன்படுத்தப்பட வேண்டும். ஆர்பிஐ-யுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைப் போக்க மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் என்றார்
அரவிந்த் சுப்பிரமணியன்.