ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 199 எம்எல்ஏக்களில், 158 பேர் கோடீஸ்வரர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் 145 பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். அதை ஒப்பிடும்போது, இந்த தேர்தலில் கோடீஸ்வர எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக "அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ்' வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் 99 எம்எல்ஏக்களில் 82 பேரும், பாஜகவின் 73எம்எல்ஏக்களில் 58 பேரும், 13 சுயேச்சை எம்எல்ஏக்களில் 11 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏக்களில் 5 பேரும் ரூ. 1 கோடியை விட அதிகமாக சொத்துகள் வைத்துள்ளனர். பணக்கார எம்எல்ஏக்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பரசுராம் மோர்டியா(ரூ. 172 கோடி), உதய் லால் அஞ்சனா(ரூ. 107 கோடி), ராம்கேஷ் மீனா(ரூ. 39 கோடி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
குறைவாக சொத்து வைத்துள்ள எம்எல்ஏக்களில், இளவயது எம்எல்ஏக்கள் ராஜ்குமார் ரோட், முகேஷ் குமார் பாஸ்கர் மற்றும் ராம்நிவாஸ் கெளரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
59 எம்எல்ஏக்கள், 5-12-ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். 129 எம்எல்ஏக்கள், பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்துள்ளதாக வேட்பு மனுவில் தெரிவித்திருந்தனர்.
மேலும், இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 199 எம்எல்ஏக்களில் 23 பேர் பெண்கள். கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்தலில் 28 பெண் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதை ஒப்பிடும் போது பெண் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.