காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மக்களவைத் தொகுதியான ரே பரேலியில் ரூ.1,100 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கிறார்.
அத்துடன், அலாகாபாதில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கும்ப மேளாவுக்கான ஏற்பாட்டுப் பணிகளையும் அவர் பார்வையிடுகிறார். இது குறித்து, உத்தரப் பிரதேச பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன் ஸ்ரீவாஸ்தவா செய்தியாளர்களிடம் கூறுகையில், ""பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை ரே பரேலிக்கு வருகிறார். பின்னர், அலாகாபாத்துக்குச் செல்ல உள்ளார்'' என்றார்.
இது குறித்து, ரே பரேலி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், ""ரே பரேலியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, ஹம்சஃபார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைத் தொடங்கிவைக்க உள்ளார். மேலும், சுமார் ரூ.1,100 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார்'' என்றனர்.
முன்னதாக, பிரதமர் வருகைக்கான ஏற்பாட்டுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த வியாழக்கிழமை ரே பரேலிக்குச் சென்றார். அப்போது, அங்குள்ள அதிநவீன ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையையும் அவர் பார்வையிட்டார்.
கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து 2 முறை மட்டுமே சோனியா காந்தி தனது தொகுதியைப் பார்வையிட்டுள்ளார். கடைசியாக, கடந்த ஏப்ரல் மாதம் அவர் வருகை தந்தார். இந்நிலையில், ரே பரேலியில் நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி வழங்க உள்ளது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் அரசியல் நகர்வாகத் தெரிகிறது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது "நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி'யைப் பயன்படுத்தி, ரே பரேலி தொகுதியில் நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், அத்தொகுதியின் வளர்ச்சியை பாஜக திசை திருப்ப முயல்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.