கொச்சி: வட இந்திய மாணவர்களுக்கு வேண்டுமென்றே பீப் கட்லெட் பரிமாறியதாக எழுந்த சர்ச்சையினைத் தொடர்ந்து கேரளாவில் கல்லூரி ஒன்று காலவரையறையின்றி மூடப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சியில் கொச்சி அறிவியல் மற்றும் தொழிநுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அருகில் உள்ள குட்டநாடு என்னும் இடத்தில், கொச்சி பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கணிசமான அளவில் வட இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்கு கடந்த 25-ஆம் தேதியன்று கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதன் முடிவில் பங்குபெற்ற மாணவர்களுக்கு சிற்றுண்டியாக கட்லெட் வழங்கப்பட்டது. அதில் சைவ கட்லெட் மற்றும் பீப் கட்லெட் இரண்டும் இடம்பெற்றுள்ளது. அதனை சில வட இந்திய மாணவர்கள் உண்டும் விட்டனர்.
பின்னர் தகவலறிந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகம் வேண்டும் என்றே தங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதற்காகவே வட இந்திய மாணவர்களுக்கு வேண்டுமென்றே பீப் கட்லெட் பரிமாறியதாக குற்றம் சாட்டினர். இவர்களுடன் கொச்சி அறிவியல் மற்றும் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் மேலும் சில வட இந்திய மாணவர்களும் இணைந்து கொண்டதால் போராட்டம் பெரிதானது. மாணவர்கள் சேர்ந்து கல்லூரி முதல்வர் சுனில்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் லேதா பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களிடம் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னரே சுனில்குமார் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். பிரச்னை முடிவுக்கு வரும் வரை பொறியியல் கல்லூரியினை காலவரையறையின்றி மூடவும் அவர் உத்தரவிட்டார்.