மும்பை: பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டில் ஐ -போன் ஆர்டர் செய்த பொறியாளர் ஒருவருக்கு, அதற்குப் பதிலாக சலவை சோப்புக் கட்டி டெலிவரி செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் தாப்ரெஜ் மெகபூப் (26). இவர் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட்டில் சிறப்புத் தள்ளுபடி திட்டத்தில், ரூ.55,000 - க்கு, தனக்கு விருப்பமான ஐபோன் 8-ஐ ஆர்டர் செய்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு கடந்த ஜனவரி 22-ம் தேதி ஐபோன் 8 பிளிப்கார்ட்டில் இருந்து டெலிவரி செய்யப்பட்டுள்ளது. தனக்கு விருப்பமான போனை பயன்படுத்த ஆவலுடன் அதனைப் பிரித்த தாப்ரெஜ்ஜுக்கு கடும் அதிர்ச்சிதான் காத்திருந்தது.
காரணம் என்னவென்றால் அட்டை பெட்டியின் உள்ளே அவர் ஆர்டர் செய்த ஐ போன் 8 க்குப் பதிலாக புதிய சலவை சோப்பு ஒன்று இருந்ததுதான்.இதனால் அதிர்ச்சியடைந்த தாப்ரெஜ் உடனே காவல்துறையில் புகார் செய்திருக்கிறார்.
அவரது புகாரின் பேரில் தற்பொழுது மும்பை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.