மும்பை: மும்பை ஐஐடி வளாகத்தில் அசைவ உணவிற்கு தடை விதிக்கப்படவில்லை என்று கல்லூரி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மும்பை ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவவர் விடுதிகளில் முட்டை உள்ளிட்ட அசைவ உணவு வகைகள் வழங்கப்படுவதற்கு, சைவ உணவு உண்ணும் சில மாணவர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர். இதன் காரணமாக அசைவ உணவுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதற்கென தனி ஆய்வுக் குழுவும் அமைக்கப்பட்டதாகக் தகவல்கள் வெளியாகின.
உணவு விடுதியில் வழங்கப்படும் சைவ உணவு பட்டியலை அதன் உரிமையாளர் ஆய்வு குழுவினரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் உணவு விடுதியில் நடத்தப்படும் இரவு நேர விருந்துகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றெல்லாம் கல்லூரி சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இது மாணவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பதின் மூலம் கல்லூரி நிர்வாகம் அசைவ உணவு சாப்பிடுவோரின் உணவுப் பழக்க வழக்கங்களை அவமதிக்கிறது என்று மாணவர்கள் சார்பில் புகார் எழுப்பபட்டது.
தற்பொழுது இந்த சர்ச்சை தொடர்பாக ஐஐடி நிர்வாகம் விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கல்லூரி வளாகத்தில் அசைவ உணவிற்கு தடை விதிக்கவில்லை என்று மீண்டும் தெளிவுபடுத்தப்படுகிறது. இது தொடர்பாக மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கும் தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.