ஷீனா போரா கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பீட்டர் முகர்ஜி, அவரது மனைவி இந்திராணி முகர்ஜி ஆகியோரிடம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய நேரடி முதலீடு பெற்றது தொடர்பான வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய நேரடி முதலீடு பெற்றதில் விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோரிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியிருந்தது.
மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீட்டர், பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி ஆகியோரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று தில்லி நீதிமன்றம் அனுப்பிய சம்மன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், இந்திராணி முகர்ஜியை கைது செய்து 2 நாள் விசாரணைக்கு உத்தரவிட்டு சிபிஐ கோரிக்கையை ஏற்று சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அவர் மீது லுக்-அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டு வெளிநாடு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.