பெங்களூரு: ஊழல்வாதிகளை அருகில் வைத்துக் கொண்டிருக்கும் மோடி பிரதமராகத் தொடர்வதற்கே தார்மீகத் தகுதியற்றவர் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதா அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் முதல்வர் எடியூரப்பா அறிவிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக் கிழமை அங்கு நடைபெற்ற 'பரிவர்த்தன் பேரணியில்' பிரதமர் மோடி கலந்து கொண்டார். எடியூரப்பா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசும்பொழுது கர்நாடக அரசு ஊழலில் திளைப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் கர்நாடக காங்கிரஸ் அரசினை அவர் "10 சதவீத கமிஷன் கவர்ன்மெண்ட்" என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் பெங்களூருவில் கர்நாடக முதலவர் சித்தராமையா திங்களன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொழுது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
ஊழல் வழக்கில் சிறை சென்ற எடியூரப்பா போன்ற ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள பிரதமர் மோடி, கர்நாடக காங்கிரஸ் அரசினை "10 சதவீத கமிஷன் கவர்ன்மெண்ட்" என்று விமர்சித்துள்ளது வெட்கக்கேடானது.
எடியூரப்பா அமர்ந்துள்ள மேடையில் நின்று கொண்டு நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்களிருந்தால் கொடுங்கள். நீங்கள் ஊழல்வாதிகளை பாதுகாக்கிறீர்கள்; அவர்கள் ஊழலுக்கு உதவுகிறீர்கள். நீங்கள் பிரதமராக நீடிப்பதற்கு தார்மீக தகுதியற்றவர்.
இவ்வாறு கடுமையாக விமர்சித்த அவர் அத்துடன் சமீபத்திய அறிக்கை ஒன்றில் கர்நாடக அரசின் நாட்கள் எண்ணப்படுவதாக கூறியிருந்த மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், 'எண்ணப்படுவது எனது அரசாங்கத்தின் நாட்கள் அல்ல; உங்கள் அரசின் நாட்கள்தான்' என்றும் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக சந்திக்குமாறு பாஜகவுக்கு சவால் விடுத்துள்ள சித்தராமையா, பாஜகவின் பரிவர்த்தன் பேரணிக்கு அதானி மற்றும் அம்பானி போன்ற பணக்காரர்கள் நிதியுதவி அளிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.