போபால்: ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணையாவிட்டால் நீங்கள் உண்மையான இந்து கிடையாது என்று ஐதராபாத் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ ஒருவர் பேசியுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஐதராபாத் பாஜக எம்.எல்.ஏ., ராஜா சிங் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் அவர் பேசியதுதான் தற்பொழுது சர்சையினை கிளப்பியுள்ளது.அவர் பேசியதாவது:
ஆர்எஸ்எஸ் என்பது ஒரு உற்பத்தி ஆலை போன்றது. இங்கிருந்துதான் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற சிறந்த தலைவர்கள் உருவானார்கள். எனவே நீங்கள் அனைவரும் முதலில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் உங்களது பெயரை பதிவு செய்து உறுப்பினராக வேண்டும்.
அத்துடன் தினமும் ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்படும் ஷகாஸ் பயிற்சி கூட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டும். அப்படி செய்யாதவர்கள் உண்மையான இந்துவாக இருக்க முடியாது. அவர்களால் நாட்டுக்கு எந்த சேவையும் செய்ய முடியாது.
இந்தியாவில் இருக்கும் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ‘’பாரத் மாதா கி ஜெய்’’ ‘’வந்தே மாதரம்’’ என்று கூற வேண்டும். அப்படி கூற விருப்பம் இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்.
இவ்வாறு அவர் பேசிய பேச்சு கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது