ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு: சிபிஐயின் ரகசிய ஆவணம் ப.சிதம்பரம் வீட்டில் பறிமுதல்?

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு தொடர்பான சிபிஐயின் ரகசிய ஆவணம் ஒன்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டில் பறிமுதல் செய்ப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு: சிபிஐயின் ரகசிய ஆவணம் ப.சிதம்பரம் வீட்டில் பறிமுதல்?

புதுதில்லி: ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு தொடர்பான சிபிஐயின் ரகசிய ஆவணம் ஒன்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டில் பறிமுதல் செய்ப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, மத்திய பொருளாதார விவகாரங்களின் அமைச்சரவை குழுவின் ஒப்புதல் பெறாமல் அனுமதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

ரூ. 600 கோடிக்கு மேல் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதற்கு மத்திய பொருளாதார விவகாரங்களின் அமைச்சரவைக் குழுவின் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், மேக்ஸிஸ் நிறுவனம் இந்த அனுமதியைப் பெறாமல் ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதை சிபிஐயும், அமலாக்கத் துறையும் கண்டறிந்தது.

அதேவேளையில் மேக்ஸிஸ் நிறுவனம், வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் அனுமதி பெறுவதற்கு பெரிய அளவில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் தெரிவித்தன. முக்கியமாக இந்த வாரியத்தின் அனுமதியைப் பெற்றுக் கொடுக்க ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி நடத்திய நிறுவனம் உதவி செய்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்காக ஒரு பெரும் தொகை கட்டணமாக கைமாறியதாகக் கூறப்பட்டது. கார்த்தி சிதம்பரம், அப்போது தனது தந்தை மத்திய நிதி அமைச்சராக இருப்பதைப் பயன்படுத்தி இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி ஏற்கெனவே சோதனை நடந்த நிலையில் மீண்டும் ஜனவரி 13-ஆம் தேதியன்று (சனிக்கிழமை) சென்னையில் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்தனர். அதேபோல் தில்லியில் உள்ள சிதம்பரம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இச்சோதனை 3 மணி நேரத்துக்கு பின்னர் 10.45 மணியளவில் நிறைவடைந்தது. சோதனை நடைபெறும்போது சிதம்பரம் தில்லியிலும், கார்த்தி சிதம்பரம் சிவகங்கையிலும் இருந்தனர். வீட்டில் சிதம்பரத்தின் மனைவி நளினி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இருந்தனர். இந்த சோதனையில், எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என கார்த்தி சிதம்பரத்தின் வழக்குரைஞர் அருண் நடராஜன் அப்பொழுது செய்தியாளர்களிடம் கூறினார்.தில்லியில் சிதம்பரமும் அதனை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு தொடர்பான சிபிஐயின் ரகசிய ஆவணம் ஒன்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டில் பறிமுதல் செய்ப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக, ஏ.என்.ஐ செய்தி நிறுவன தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக உச்ச நீதிமன்றதில் ஒப்படைப்பதற்காக தயார் செய்யப்பட்ட சீலிடப்பட்ட ஆவணம், அமலாக்கத்துறை சோதனையின் பொழுது சிதம்பரம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த விவகாரத்தில் கடும் பரபரப்பு எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com