விக்ரமன் படம் போல.. ஒரே நாளில் ஒரு கிராமமே கோடீஸ்வர கிராமமாக மாறிய நிஜம்
அருணாச்சலப்பிரேசத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுமே ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது எப்படி சாத்தியம்? என்று கேட்கலாம். சாத்தியமே. எதுவும் சாத்தியமே என்கிறது இந்த செய்தி.
அதாவது, அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ளது போம்ஜா கிராமம். சுமார் 31 குடும்பங்கள் வசித்து வந்த இந்த கிராமத்தினரிடம் இருந்து 200.056 ஏக்கர் நிலத்தை இந்திய ராணுவம் 5 ஆண்டுகளுக்கு முன்பு, தங்களது பயன்பாட்டுக்காக கைப்பற்றியது.
இந்த 31 குடும்பங்களிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை மத்திய பாதுகாப்புத் துறை நேற்று விடுவித்தது. நெடுநாட்களாக நிலுவையில் இருந்த இந்த இழப்பீட்டுத் தொகையை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனி கவனம் செலுத்தி விடுவித்ததாக அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு கூறியுள்ளார்.
பாதுகாப்புத் துறையிடம் இருந்து கிடைத்த இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை, முதல்வர் பெமா காந்து கிராம மக்களிடம் நேற்று வழங்கினார்.
அதில், ஒரே குடும்பத்துக்கு மட்டும் ரூ.6.73 கோடி இழப்பீடாகக் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்து மற்றொரு குடும்பத்துக்கு ரூ.2.45 கோடி இழப்பீட்டுத் தொகை கிடைத்தது. அனைத்து குடும்பங்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.1.09 கோடி அளவுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
இந்தியாவிலேயே பணக்கார கிராமமாக போம்ஜா மாறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்று செய்தி பரவிய நிலையில், அதனை புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான் உறுதி செய்ய முடியும் என்று மாவட்ட அதிகாரி கூறியுள்ளார்.