கடற்படை தலைமைத் தளபதி சவூதி பயணம்
கடற்படை தலைமைத் தளபதி சுனில் லம்பா அரசு முறைப்பயணமாக சவூதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவர் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
குறிப்பாக, பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் இரு தரப்புக்கும் இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
சுனில் லம்பா சவூதி அரேபியாவில் கடந்த 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை பயணம் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக அவர் அந்நாட்டு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் முகமது பின் அப்துல்லா அல் ஆயிஷ், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அப்துல் ரகுமான் பின் சாலே அல் - பான்யன், கடற்படை துணைத் தளபதி ஃபகத் பின் அப்துல்லா அல் கோஃபைலி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக அவர்களுடன் சுனில் லம்பா ஆலோசித்தார். அப்போது அதுகுறித்த முக்கிய விஷயங்களை இருதரப்பினரும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். இந்த நடவடிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் சவூதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டு அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.