ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நிலைமை குறித்து மத்திய பாதுகாப்புத் துறைச் செயலர் சஞ்சய் மித்ரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அந்தத் துறையின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
காஷ்மீர், காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் எல்லை பாதுகாப்புச் சாவடிகளில் சஞ்சய் மித்ரா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அவரிடம், பாதுகாப்பு நிலவரம் குறித்தும், ராணுவத்துக்கு மாநில அரசின் அனைத்து துறைகளும் அளிக்கும் ஒத்துழைப்பு குறித்தும் ராணுவ உயரதிகாரிகள் எடுத்துரைத்தனர். பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு,
பாதுகாப்புப் படையினரை அவர் பாராட்டினார் என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
துணைத் தளபதி ஆய்வு: இதனிடையே, இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி சரத் சந்த், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு நிலவரம் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "அவரிடம் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், பருவநிலை சவால்களை வீரர்கள் எதிர்கொள்வது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன், பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், எல்லை தாண்டிய ஊடுருவல்களை முறியடிப்பது ஆகியவை தொடர்பாகவும் அதிகாரிகள் அவரிடம் விளக்கினர்' என்றார்.