போலீஸ் அதிகாரிகளை விசாரிக்க அரசு அனுமதி தேவையில்லை: சொராபுதீன் வழக்கில் சிபிஐ வாதம் 

சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் முன் அனுமதி கோர வேண்டிய அவசியம் இல்லை என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ வாதிட்டுள்ளது.
போலீஸ் அதிகாரிகளை விசாரிக்க அரசு அனுமதி தேவையில்லை: சொராபுதீன் வழக்கில் சிபிஐ வாதம் 

சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் முன் அனுமதி கோர வேண்டிய அவசியம் இல்லை என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ வாதிட்டுள்ளது. போலி என்கவுன்ட்டர் என்பதே அலுவல்ரீதியான நடவடிக்கை அல்ல என்றும் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் சொராபுதீன், அவரது மனைவி கெüசர் பாய், அவர்களின் கூட்டாளிகள் துளசிதாஸ் பிரஜாபதி ஆகியோர் கடந்த 2005}ஆம் ஆண்டு நவம்பர் மாதம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும், லஷ்கர் அமைப்பின் பயங்கரவாதிகள் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சொராபுதீன் உள்ளிட்டோர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகவும், அந்தச் சம்பவத்தில், காவல் துறை உயரதிகாரிகள், அப்போதைய மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா ஆகியோருக்குத் தொடர்பு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதனை விசாரித்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அமித்ஷா உள்ளிட்ட சிலரை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று சிபிஐ முடிவு செய்தது. இந்நிலையில், சிபிஐ அமைப்பின் முடிவுக்கு எதிராக மும்பை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் பொது நல மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். இது ஒருபுறமிருக்க, வழக்கில் இருந்து போலீஸ் அதிகாரிகள் டி.ஜி.வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், எம்.என்.தினேஷ் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சொராபுதீனின் சகோதரர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதேபோன்று வேறு சில காவலர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுக்கள், நீதிபதி ரேவதி மொஹிதி தேரே முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் வாதிட்டதாவது:
சொராபுதீன் வழக்கில் போலீஸ் அதிகாரிகளிடமும், காவலர்களிடமும் விசாரணை நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்படுகிறது. பொதுவாக போலி என்கவுன்ட்டர் என்பதே அலுவல் நடவடிக்கைகளுக்கு முரணானதுதான். அப்படியிருக்கையில், இந்த விவகாரத்தில் அரசிடம் முன் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
சொராபுதீன் வழக்கில் விரைந்து தீர்வு காணும் நோக்கில், அதை நாள்தோறும் விசாரிக்கப் போவதாக மும்பை உயர் நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com