கர்நாடகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைக்க ஆளும் காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் அங்கு தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் மத்தியில் ஆளும் பாஜக, இளைஞர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளித்த வேலைவாய்ப்பு திட்டத்தின் நிலை குறித்து தொடர்ந்து விமரிசித்து வருகிறார்.
இந்நிலையில், ராய்ச்சூர் பகுதியில் அமைந்துள்ள கல்மாலா கிராமத்தில் காங்கிரஸின் ஜன ஆசிர்வாத யாத்திரையில் கலந்துகொண்ட அக்கட்சித் தலைவர் ராகுல், அங்குள்ள மாரம்மா என்பவரது கடையில் இளைப்பாறினார்.
அப்போது பகோடா, மிளகாய் பஜ்ஜி மற்றும் தேநீர் ஆகியவற்றை அருந்திய பின்னர் பிரசாரத்தை மீண்டும் தொடர்ந்தார். அப்போது ராகுலுடன் கார்நாடக முதல்வர் சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், அமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.