மகாராஷ்டிர மாநிலம், விதர்பா, மாராத்வாடா பிராந்தியங்களில் அண்மையில் ஆலங்கட்டி மழை, பலத்த காற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்கு, மத்திய அரசிடம் ரூ.200 கோடியை நிவாரணமாக அந்த மாநில அரசு கோரியுள்ளது.
இதுகுறித்து மும்பையில் மகாராஷ்டிர மாநில வேளாண்துறை அமைச்சர் பாண்டுரங்க பண்ட்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆய்வு பணிகளில் பெரும்பாலானவை கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகளிலேயே முடிந்து விட்டது. இதன்படி, 1,900 கிராமங்களில் 2 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு மகாராஷ்டிர அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், ரூ.200 கோடியை நிவாரணமாக அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தில்லியில் இதுகுறித்து மத்திய வேளாண்துறை அமைச்சரை வரும் 22ஆம் தேதி நான் சந்தித்து பேசவுள்ளேன்.
வேளாண் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், காப்பீட்டு நிறுவனங்கள் மூலமும் இழப்பீடு அளிக்கப்படும்.
இந்த ஆலங்கட்டி மழை, புயல் காற்றினால் ஏற்பட்ட சேத விவரத்தின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து வியாழக்கிழமை தெரிய வரும் என்றார் அமைச்சர் பண்ட்கர்.
இதனிடையே, சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்செய முண்டே, ஆலங்கட்டி மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டினார்.