உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாதில் தலித் மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு பயின்று வந்த திலீப் (26) என்ற அந்த மாணவர், உணவகம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அலாகாபாதில் சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வன்முறை வெடித்தது.
இதனிடையே, தலித் மாணவர் கொலை தொடர்பாக, ஆளும் பாஜகவையும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
'சமூக விரோதிகளின் கையில் உத்தரப் பிரதேசம் சிக்கித் தவிப்பதாக' சமாஜ வாதி தலைவர் அகிலேஷ் சாடினார். பாஜகவின் ஜாதிய மற்றும் வெறுப்புணர்வு அரசியலால், உத்தரப் பிரதேசத்தில் தலித் மாணவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்கதையாகி வருவதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விமர்சித்தார்.
இந்நிலையில், மாணவர் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஆகாஷ் குல்ஹரி புதன்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'விஜய சங்கர் சிங் என்ற அந்த நபர், சுல்தான்பூரில் புதன்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார்.