மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்ட வைர வியாபாரி நிரவ் மோடி, தன்னையும் ஏமாற்றி விட்டதாக பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா புகார் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ. 280 கோடி மோசடியும், சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்தவகையில் ரூ.11, 600 கோடி மோசடி செய்ததாக, பிரபல வைரவியாபாரி நிரவ் மோடி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் அவர் ஜனவரி மாத துவக்கத்திலேயே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக தற்பொழுது தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது சார்பில் 'நிரவ் மோடி' என்ற பெயரில் பல்வேறு நகைக்கடைகள் மும்பை, புதுடெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் சர்வதேச அளவில் வைரங்களை ஏற்றுமதி செய்யும் பெரிய வைர வியாபாரியாகவும் நிரவ் மோடி விளங்கி வந்திருக்கிறார். இவரது நகைக்கடைகளுக்கு சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக பிரபல பாலிவுடன் நடிகை பிரியங்கா சோப்ரா செயல்பட்டு வந்திருக்கிறார்.
நிரவ் மோடி விவகாரம் சூடு பிடித்து வரும் நிலையில் தற்பொழுது பிரியங்கா சோப்ரா அவர் மீது பரபரப்பு புகார் ஒன்றைக் கூறியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
நிரவ் மோடியின் நகைக்கடைகள் தொடர்பான விளம்பரப்படங்களில் நடித்த வகையில் எனக்கு உரிய ஊதிய நிலுவைத் தொகையை நிரவ் மோடி தரவில்லை. இதன் காரணமாக அந்த நிறுவனத்துடனான உறவை ஏற்கெனவே துண்டித்துவிட்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.