ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலத்தில் இன்று மீண்டும் ஆஜரானார்.
மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த காலகட்டத்தில், மும்பையைச் சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டை பெற, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில், அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும், அதற்கு பிரதிபலனாக அவருக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் லஞ்சம் அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, தில்லியிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஜனவரி 18-ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் அவரை மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறையினர் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று கார்த்தி சிதம்பரம் 2ஆவது முறையாக இன்று மீண்டும் ஆஜரானார்.