உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயில், குளிர் பருவம் முடிந்து வரும் ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில், குளிர் காலங்களில் பனியால் மூடப்பட்டு விடும். இதன் காரணமாக 6 மாதங்கள் நடை சாத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு நவம்பரில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்படவுள்ளது.
உகிமாத் நகரிலுள்ள ஓம்காரேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி தினமான புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கேதார்நாத் கோயில் தலைமை பூசாரி இந்த அறிவிப்பை வெளியிட்டார். குளிர் காலத்தின்போது கேதார்நாத் கோயில் சிலை ஓம்காரேஸ்வரர் கோயிலில்தான் வைக்கப்பட்டிருக்கும். மீண்டும் நடை திறப்பதையொட்டி, ஏப்.26-ஆம் தேதி கேதார்நாத் சுவாமி சிலை பல்லக்கில் எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இமய மலையில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயிலுக்கு, உள்நாடு, வெளிநாடு என லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருவது குறிப்பிடத்தக்கது.