லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆண்போல வேடமிட்டு இரண்டு பெண்களை மணந்து மோசடி செய்து ஏமாற்றிய பலே பெண்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிகானீரைச் சேர்ந்தவர் ஸ்வீட்டி சென். சிறுவயது முதலே ஒரு ஆண் போலவே உடை அணிந்து மற்றும் கிராப் சிகையலங்காரம் என்று இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது பெயரை கிருஷ்ணா சென் என்று மாற்றி வைத்துக் கொண்டார். அதைக் கொண்டு பேஸ்புக்கில் போலி கணக்கு ஒன்றைத் தொடங்கினார்.
அந்த கணக்கின் வாயிலாக ஆண்களைப் போல் ஜீன்ஸ், சட்டை அணிந்த படங்களை வெளியிட்டார். படித்த இளைஞன் போன்ற தோற்றம் கொண்ட அவரது தோற்றத்தின் காரணமாக, பல பெண்கள் பேஸ்புக்கில் அவருடன் நட்பாக பழகினார்கள். அவர்களில் வசதி படைத்த பெண்களை மட்டும் தேர்வு செய்த கிருஷ்ணா சென் அவர்களுடன் அடிக்கடி பேசி நட்பை வளர்த்துக் கொண்டார். இதன்மூலம் அவர்களை வளைத்துப் போட்டுப் பணம் பறிக்கத் திட்டமிட்டார்.
இவரது தோற்றத்தை நம்பி ஏமாந்த நைனிடாலைச் சேர்ந்த காமினி என்ற பெண் அவரது போலி காதல் வலையில் வீழ்ந்தார். இவரது தந்தை பெரிய தொழில் அதிபர் என்று தெரிந்தவுடன், அவரை மணக்க கிருஷ்ணா சென் விருப்பம் தெரிவித்தார். பின்னர் இதற்காக போலியாக பெற்றோர்களை ஏற்பாடு செய்து 2014-ல் காமினியினை திருமணம் செய்தார். இருவரும் ஒரே வீட்டில் 'குடும்பம்' நடத்தினர்.
தனது உருவ வித்தியாசம் தெரிந்து விடாமல் எச்ச்சரிக்கையாக இருந்த அவர், வரதட்சணை கேட்டு காமினியினை அடித்து துன்புறுத்தினார். அவரது சித்ரவதை தாங்காமல் கிருஷ்ணா கேட்கும் போதெல்லாம் காமினி பணம் கொடுத்தார்.
அதன் அடுத்த கட்டமாக கிருஷ்ணா சென் கலாதுங்கி என்ற பகுதியைச் சேர்ந்த நிஷா என்ற மற்றொரு பெண்ணையும் இதேபோல் ஏமாற்றி திருமணம் செய்தார். அவரையும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார். இரு பெண்களையும் மாறி மாறி துன்புறுத்தி லட்சக்கணக்கில் ஏமாற்றி பணம் பறித்து வந்தார்.
அதிகரித்து வந்த இவரது கொடுமையினைத் தாள முடியாத காமினி ஒரு கட்டத்தில் இதுபற்றி போலீசில் புகார் செய்தார். பின்னர் பொறிவைத்து கிருஷ்ணா சென் என்ற ஸ்வீட்டியை போலீசார் கைது செய்தனர். கைதுக்குப் பின்னர் கிருஷ்ணா சென் ஆண் இல்லை என்பதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணா சென் மீது ஏமாற்றி பணம் பறித்தல், மோசடி, பெண்களை துன்புறுத்துதல் உள்பட பல பிரிவுகளின் வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.