முன்னாள் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் இ. பொன்னுசாமி சனிக்கிழமை அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) சுமார் 15 ஆண்டுகள் இருந்த பொன்னுசாமி, 1999-2001 ஆண்டுகளில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு பாமகவிலிருந்து விலகி கடந்த ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், தில்லியில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பொன்னுசாமி பாஜகவில் சனிக்கிழமை இணைந்தார். அப்போது மத்திய இணையமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன், பாஜகவின் தேசியச் செயலாளர் முரளிதர் ராவ், தமிழகத் தலைவர் தமிழிசை செüந்தரராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பொன்னுசாமி கூறியதாவது:
கல்லூரித் தோழரும் பாமக நிறுவனருமான ராமதாஸின் விருப்பத்தின் பேரில் முதன் முதலாக சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். வாஜ்பாய் தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை இணையமைச்சராக இருந்தேன். 10 ஆண்டு காலம் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்காக என்னால் முடிந்த பணியை ஆற்றினேன்.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் இருந்து விலகினேன். பாஜகவில் சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தபோதிலும், மறைந்த பத்திரிகையாளர் சோ. ராமசாமி யோசனையின் பேரில் அதிமுகவில் சேர்ந்தேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் தலைமையும் இல்லை. நிர்வாகமும் சரிவர இல்லை. இந்நிலையில், பாஜகவுக்கு வர வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் அழைத்ததன் பேரில் அக்கட்சியில் இணைந்துள்ளேன் என்றார் அவர்.