மகாத்மா காந்தி படுகொலையின் சதியை வெளிக்காட்டும் முக்கிய ஆவணங்கள்: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்!

மகாத்மா காந்தி படுகொலையின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பதை வெளிக்காட்டும் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி படுகொலையின் சதியை வெளிக்காட்டும் முக்கிய ஆவணங்கள்: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்!

புதுதில்லி: மகாத்மா காந்தி படுகொலையின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பதை வெளிக்காட்டும் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் பங்கஜ் பட்னிஸ், அபிநவ பாரத் என்ற தொண்டு அமைப்பை நடத்தி வருகிறார். அவரது சார்பில் மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உதவியாளராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் அமரேந்திர சரண், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டிய தேவையில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு திங்களன்று நீதிமன்றத்தில் நீதிபதிகள் பாப்டே மற்றும் நாகேஸ்வர ராவ் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பங்கஜ் பட்னிஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்ததாவது:

மகாத்மா காந்தி படுகொலையின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பதை வெளிக்காட்டும் முக்கிய ஆவணங்கள் இருக்கின்றன. இந்திய அரசாங்கம் இந்த ஆவணங்களைத் தடை செய்துள்ளது. நான் அவற்றை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள தேசிய நூலகத்தில் இருந்து பெற்றேன். அவை ஒரு சீலிடப்பட்ட உறையில் உள்ளன.

அவற்றை இங்கு தாக்கல் செய்ய உங்கள் அனுமதியினைக் கோருகிறேன். முதலில் அந்த ஆவணங்கள் மீதுள்ள தடையினை நீக்க கோரி பாம்பே உயர் நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது  

அமெரிக்காவில் உள்ள அனுபவம் வாய்ந்த சட்ட நிபுணர் ஒருவரிடம் நடத்தப்பட்ட ஆலோசனையின்படியும், அங்கு இருக்கக் கூடிய சிறப்பு தடயவியல் வசதிகளின் மூலம் ஆய்வு செய்த வகையிலும், காந்தி இறந்து விட்ட பின்பு பத்திரிகைகளில் வெளியான புகைப்படங்களில், அவரது உடலில் நான்கு காயங்கள் இருப்பதனைக் காண முடிகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   அவரது வேண்டுகோளின் படி என்ன என்ன ஆவணங்களை அவர் தாக்கல் செய்ய விரும்புகிறார் என்பதை மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிமன்றம்,வழக்கினை மார்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com