குஜராத் மாநிலத்தில் நகராட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 47 நகராட்சிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
குஜராத்தில் உள்ள 75 நகராட்சிகளுக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின.
அதன்படி, மொத்தமுள்ள 75 நகராட்சிகளில் 47-இல் பாஜக வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 16 நகராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தலா ஒரு நகராட்சியில் வெற்றி பெற்றுள்ளன.
சுயேச்சைகள் 4 நகராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 6 நகராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால், தொங்கு நிலை நிலவுகிறது. ஆமதாபாதில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தத் தகவலை மாநில தேர்தல் ஆணையர் வரேஷ் சின்ஹா தெரிவித்தார்.
குஜராத் சட்டப் பேரவைக்கு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், பாஜக 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அதேநேரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 77 தொகுதிகளில் வென்று அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.
நகராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானதும், காந்திநகரில் உள்ள பாஜக மாநில தலைமையகம் முன்பு அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.