குஜராத் மாநிலத்தில் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது குடும்பத்தினருடன் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர், சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
இந்தியா வந்துள்ள கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடா, தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை காலை குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு வந்தார். இந்திய பாரம்பரிய உடையணிந்து வந்த அவர்கள், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று பார்வையிட்டனர். அûத் தொடர்ந்து, ஆசிரமத்தில் காந்தி வாழ்ந்த ஹிருதய் குஞ்ச் இல்லத்துக்குச் சென்று அவர்கள் பார்வையிட்டனர். அந்த இல்லத்தில் தங்கியிருந்தபடிதான் காந்தி, அஹிம்சை போராட்டத்தை முன்னெடுத்தார்.
ஆசிரமத்தில் உள்ள காந்தியின் ராட்டையில் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது மனைவி சோஃபி மற்றும் குழந்தைகள் ஆகியோர் நூல் நூற்பதில் ஆர்வம் காட்டினர். பின்னர், அங்கிருந்து சுவாமி நாராயண் அக்ஷர்தாம் ஹிந்து கோயிலுக்குச் சென்று அவர்கள் வழிபட்டனர். "இந்தக் கோயில் அமைதிக்கான இடம்' என்று அங்குள்ள பதிவேட்டில் எழுதி ஜஸ்டின் ட்ரூடோ கையெழுத்திட்டார்.
முன்னதாக, கனடா பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரை கோயில் குருக்கள் பூங்கொத்துகளைக் கொடுத்து வரவேற்றனர்.
முதல்வருடன் சந்திப்பு: ஜஸ்டின் ட்ரூடோ தனது பயணத்தை முடித்துக் கொண்டு மாலையில் தில்லி திரும்பும்போது, ஆமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, குஜராத்- கனடா இடையேயான உறவை வலுப்படுத்து குறித்தும், கல்வி, தொழில் துறை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வது குறித்தும் தலைவர்கள் இருவரும் விவாதித்தனர்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள துடிப்புமிகு குஜராத் சர்வதேச மாநாட்டுக்கு வருமாறு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு விஜய் ரூபானி அழைப்பு விடுத்தார். அதேபோல், கனடாவுக்கு வருமாறு விஜய் ரூபானிக்கு ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை விஜய் ரூபானி ஏற்றுக் கொண்டார்.
ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உரை: முன்னதாக, ஆமாதாபாதில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) ஜஸ்டின் ட்ரூடோ உரையாற்றினார். அப்போது, உலக நாடுகள், உலகமயமாக்கலை நோக்கிச் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.