கோண்டா (உ.பி): நாய் குரைத்துக் கொண்டே தான் இருக்கும் என்று ஒரு பழமொழி உள்ளது என்று ராகுல் பற்றிய கேள்விக்கு உத்தரபிரதேச மாநில பாஜக எம்பி ஒருவர் அளித்துள்ள பதில் கடும் சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பிரிஜ் பூஷன் சரண். இவர் அக்கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இந்நிலையில் கோண்டா மாவட்டத்தில் திங்களன்று அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சரண் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்பொழுது பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழில் அதிபர் நிரவ் மோடி பண மோசடி செய்த விவகாரம் குறித்து, பிரதமருக்கு ராகுல் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருவது செய்தியாளர்கள் சரணிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், ”நாய்கள் குரைக்கும், ஆனால், யானை தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. அதே போல்தான் பிரதமர் மோடி நாட்டுக்கு சேவை செய்து கொண்டு இருக்கிறார். எனவே, குரைக்க விரும்புவர்கள் தொடர்ந்து குரைக்கட்டும்” என்றார்.
அவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது