மேகாலயத்தில் "கணவன்-மனைவி' அரசு நடைபெற்று வருவதாகவும், அனைத்து துறைகளிலும் அந்த அரசு தோல்விகண்டு விட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாடியுள்ளார்.
மேகாலயத்தில் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது மனைவி, அமைச்சராக உள்ளார். அதனைக் குறிப்பிடும் வகையில், "கணவன்-மனைவி' அரசு என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
60 உறுப்பினர்களைக் கொண்ட மேகாலய சட்டப் பேரவைக்கு வரும் 27-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அங்குள்ள காரோ ஹில்ஸ் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:
மேகாலயத்தில் நடைபெற்று வரும் "கணவன்-மனைவி' அரசு, சுகாதாரத் துறை, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு என அனைத்து துறைகளிலும் தோல்வி கண்டுவிட்டது. நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்ல உரிய வசதிகள் இல்லை. தார்ப்பாய்களில் அவர்களை தூக்கிச் செல்லும் அவலம் நிலவுகிறது. முதல்வர் முகுல் சங்மா ஒரு மருத்துவராக இருந்தும், மாநிலத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காதது வியப்பளிக்கிறது.
மேகாலயத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலம் முழுவதும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஷில்லாங் அரசு மருத்துவமனை, ஆராய்ச்சி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு மேம்படுத்தப்படும் என்றார் ராஜ்நாத் சிங். மேலும், கிழக்கு காரோ ஹில்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் உள்பட 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.